அமைச்சர் ஜெயக்குமார் விசுவாசம் இல்லாதவர்.. மதுசூதனன் விளாசல்
சென்னை: நிதி அமைச்சர் ஜெயக்குமார் விசுவாசம் இல்லாதவர். அவரது பேச்சுக்கு எல்லாம் கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை என்று ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் மதுசூதனன் சாடியுள்ளார்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் ஈபிஎஸ் அணியினரும் ஓபிஎஸ் அணியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இரு அணியினருக்கும் இடையிலான வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் அமைச்சர் ஜெயக்குமாரும், ஓபிஎஸ் அணி மதுசூதனனும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தண்டையார் பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் கூறுகையில், ஜெயிலில் இருக்கும் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் இந்த அரசை இயக்கி வருகின்றனர். 5 வருடம் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை எப்படி ஏற்க முடியும்?
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அவரை கட்சியில் சேர்த்து துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை ஏற்க முடியாது. சிறையில் இருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரனின் பின்னணியில் ஆட்சி செயல்படுவது தமிழக மக்களுக்கு நல்லதல்ல.
நிதி அமைச்சர் ஜெயக்குமார் விசுவாசம் இல்லாதவர். அவரது பேச்சுக்கு எல்லாம் கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தேர்தல் கமிஷன் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு மதுசூதனன் தெரிவித்தார்.