முதல்வருக்கு கடிதம் எழுதினீர்களா..? என்ன கடிதம் எழுதினீர்களா..? நிருபர்களை தெறிக்கவிட்ட மதுசூதனன்
Recommended Video
சென்னை: அதிமுகவுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்த விரும்ப மாட்டேன் என்று அக்கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனிடம் தோல்வியடைந்தார்.
இந்த தோல்வி குறித்து ஆய்வு நடத்தவில்லை என்று குற்றம்சாட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சி ரகசியம்
இந்த நிலையில், இன்று நிருபர்களின் கேள்விகளுக்கு மதுசூதனன் அளித்த பதில்: ஆர்.கே.நகர் தோல்வி தொடர்பாக நான் கடிதம் எழுதியது கட்சியின் உள்விவகாரம். நான் கடிதம் கொடுத்தேனோ இல்லையோ , அது கட்சி ரகசியம். ஓபிஎஸ்சுக்கும், எடப்பாடிக்கும் மட்டுமே அது தெரியும். அதிமுகவுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்த நான் விரும்பமாட்டேன்.
கட்சியை உருவாக்கினேன்
அதிமுக கட்சி உருவானபோது, கருணாநிதியால் தண்டிக்கப்பட்டு நான் சிறையில் இருந்தேன். அதிமுக என்னால் உருவாக்கப்பட்ட கட்சி. நானும் எனது குருநாதர் மு.பாண்டியனும் இணைந்து உருவாக்கினோம். எனவே அதிமுக கட்சிக்கு களங்கம் ஏற்பட விடமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உள்குத்து காரணமா?
நீங்கள் அனுப்பிய கடிதத்தில், அமைச்சர் மற்றும் எம்.பி ஆகியோர் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்களே என்ற நிருபர்கள் கேள்விக்கு, "நீங்க கடிதத்தை படிச்சீங்களா? கட்சி தலைமைக்கு அனுப்பிய கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்? அது சீக்ரெட். மீடியாக்களிடம் அதை சொல்லும் கடமை எனக்கு இல்லை, என்றார் மதுசூதனன்.
எடப்பாடியிடம் கேளுங்கள்
திமுகவும், டிடிவி தினகரனும் இணைந்து கொண்டுதான் உங்களுக்கு எதிராக செயல்பட்டனரா என்ற கேள்விக்கு, தோல்விக்கான காரணம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம்தான் கேட்க வேண்டும் என்று மதுசூதனன் தெரிவித்தார். கடைசிவரை கடிதம் எழுதினீர்களா என்ற நிருபர்களின் தொடர் கேள்விகளுக்கு, எழுதினேனோ இல்லையோ அது சீக்ரெட் என்று திரும்ப திரும்ப பதில் அளித்தார் மதுசூதனன்.