பலம் பெறுகிறது அதிமுக அணிகள்.. தினகரனுக்கு பெரும் பின்னடைவு.. ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பில்லை
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்தால் பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக அணிகள் இணைப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிடிவி தினகரன் தரப்பை ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகள் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளன. மேலூர் பொதுக்கூட்டத்தில் தினகரனுடன் 14 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்களும் இவ்விரு அணிகள் இணைப்புக்கு பிறகு தினகரனை விட்டுவிட்டு இணையும் அணியும் பக்கம் வரலாம் என்று தெரிகிறது.
எனவே தினகரன், அதிமுக அரசை கலைக்கும் நிலையில் இல்லை என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இரு அணிகள் இணைந்ததும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை போட்டியிட செய்யலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ.பி.எஸ்-எடப்பாடி அணிகள் ஆர்.கே.நகரில் மதுசூதனனை களமிறக்க ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்றும், விரைவிலேயே அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை அக்கட்சி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக்கி தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பன்னீர்செல்வம் தலைமையிலுள்ள 14 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி அதிமுக இணைப்பு குறித்து முடிவெடுக்க உள்ளதாம்.