வேலூரில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவுக்கு ஹைகோர்ட் அனுமதி! 17 நிபந்தனைகள் விதிப்பு!!
சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவை வேலூரில் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த விழாவை நடத்த 17 நிபந்தனைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
மைசூரை ஆண்ட விடுதலைப் போராட்ட வீரர் திப்புசுல்தானின் பிறந்த நாள் நவ.20. திப்புவின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை வேலூர் மாவட்டம் குடியாத்தம் அலியார் தெருவில் நடத்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவின் போது நிகழ்ந்த வன்முறையை சுட்டிக் காட்டி வேலூர் போலீசார் இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலர் இஸ்மாயில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த போலீசார், வேலூர் ஆம்பூரில் அண்மையில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. தற்போது திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறியிருந்தது.
இவ்வழக்கை கடந்த 23-ந் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் விசாரித்த போது, தமிழக அரசே திப்புசுல்தானுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கட் நாட்டியுள்ளது. ஆகையால் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது தேவையற்றது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விழாவை அனுமதிப்பதற்கான நிபந்தனைகளை தாக்கல் செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில் போலீசார் 17 நிபந்தனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதை ஏற்ற நீதிபதி சுந்தரேஷ், ஜனவரி 9 அல்லது 10-ந் தேதியன்று மனுதாரர் விழாவை நடத்தலாம் என்றும் பொது அமைதியை கெடுக்கக் கூடாது; பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்பது உட்பட 17 நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு அனுமதி அளித்தார்.