விஜயேந்திரர் மீது வழக்கு பதிய கோரிய மனு... போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத விஜேயேந்திரர் மீது வழக்கு பதியக் கோரி தொடரப்பட்ட மனுவில் பதில் தருமாறு போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை : நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மீது வழக்கு பதியக் கோரி தொடரப்பட்ட மனு மீது போலீஸ் பதில் தர ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. த.பெ.தி.க நிர்வாகி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதத்தில் நடைபெற்ற தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டார். தேசிய கீதப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியவர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சங்கர மடம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது தியானம் செய்வது எங்களின் வழக்கம் என்று மழுப்பல் பதிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இது குறித்து பதில் அளிக்குமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.