ஆவின் பால் விலையை குறைக்கக்கோரி மனு: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ஆவின் பால் விலையை குறைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சூர்யபிரகாசம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் வினியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வை திரும்ப பெறுமாறு தமிழக அரசிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ள மனுதாரர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பால் விலையை குறைப்பது குறித்து 8 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.