கிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கை அடிப்படையில் செயல்திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கிரானைட் முறைகேடு வழக்கில், சகாயம் அறிக்கை அடிப்படையில், ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் செயல் திட்டம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனக்கூறி வழக்கு விசாரணையை ஜூலை 28 ம் தேதிக்கு ஹைகோர்ட் ஒத்திவைத்துள்ளது. சகாயம் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் தேவை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த கனிம வள முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி தொடங்கி 2015 அக்டோபர் வரை 21 கட்டமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 7 ஆயிரம் பக்க ஆவணங்கள், 600 பக்க இறுதி அறிக்கையை சகாயம் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த முறைகேட்டில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று குழு கூறியுள்ளது.
கிரனைட் முறைகேட்டில் ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,பறிமுதல் செய்யப்பட்ட கிரனைட் கற்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு சி பி ஐ விசாரணைக்கு உத்தர விட வேண்டும் எனவும் ,இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று உயர்நீதிமன்றம், கிரானைட் மோசடி குறித்து தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அறிக்கையை தாக்கல் தமிழக உத்தரவிட்டுள்ளது. கிரானைட் மோசடி வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவூல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.
கிரானைட் முறைகேடு வழக்கில், சகாயம் அறிக்கை அடிப்படையில், ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் செயல் திட்டம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ. நான்கு வாரத்திற்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் கிரானைட் வழக்கு விசாரணையை ஜூலை 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.