2 தலைமுறைகளை அழிக்கும் விஷம் டாஸ்மாக்: ஹைகோர்ட் தடாலடி
டாஸ்மாக் கடைகள் மூலம் இந்த ஆண்டு எவ்வளவு மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: டாஸ்மாக் கடைகளை மூடினால் அடுத்த 2 தலைமுறைக்குப் பிறகு வருவபர்களை காக்க முடியும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் கடைகள் மூலம் எவ்வளவு மதுவிற்க அரசு இந்த ஆண்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு கேள்வி எழுப்பியது.
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்களும், சிறுவர்களும் ஃபேஷனுக்காக போராட்டம் நடத்துவதாக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்திருந்தார். ஆனால் பொதுமக்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாகவே போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறினர்.
மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தை யாரோ தூண்டி விடுவதாக கூறுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் திருமுல்லைவாயிலில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரசன்னா உள்ளிட்ட 21 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்ட வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் பிரசன்னாவை விடுதலை செய்ய உத்தரவிட்டும் அதனை நிறைவேற்ற சிறைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காத நிலையில் சிறைத்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி இன்று நடைபெற்ற விசாரணையின் போது சிறைச்சாலைகளில் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் எத்தனை சிறைகளில் உளவியல் ஆலோசகர்கள் அரசு நியமித்துள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சிறைச்சாலைகளில் லோக் அதாலத் நடைபெறுகிறதா எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறையில் இருந்து விடுதலையானோர் மறுவாழ்வுக்கான நல்வாழ்வு குழு இயங்குகிறதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இப்போது டாஸ்மாக் கடையை மூடினால் அடுத்த 2 தலைமுறைக்கு பிறகு வருபவர்களை காக்க முடியும் என்றும் 2 தலைமுறைகளை அழிக்கும் டாஸ்மாக் விஷம் போல் பரவியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.