ஆசிட் வீச்சில் இளம்பெண் பலி... குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஹைகோர்ட்
சென்னை: ஆசிட் வீச்சில் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வித்யா. கடந்த 2013-ம் ஆண்டு ஆசிட் வீச்சில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாஸ்கர் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அப்போது, விஜயபாஸ்கருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.