இந்து தீவிரவாதம்: கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு
இந்து தீவிரவாதம் பிரச்சனையில் கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இந்து தீவிரவாதம் விமர்சனம் தொடர்பாக கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்து தீவிரவாதம் குறித்து விமர்சன கட்டுரையை வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டது. கமல்ஹாசன் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல் தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் தமது மனுவில், கமல்ஹாசனுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தேவராஜன் வலியுறுத்தியிருந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கமல்ஹான் மீதான தேவராஜனின் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நிலவேம்பு கசாயம் தொடர்பான வழக்கிலும் கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,.