நேதாஜிக்கு பாரத ரத்னா, பிறந்த நாளன்று விடுமுறை... முடிவெடுக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் 8 வார அவகாசம்
சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு பாரத ரத்னா விருது மற்றும் அவரது பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து 8 வார காலத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல வழக்குகளுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நேதாஜியின் தியாகங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும், அவருக்கு மணிமண்டபமும், வாழ்க்கை வரலாறு குறித்த அருங்காட்சியகத்தை டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களிலும் அமைக்கவும், அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், விமலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து 8 வாரங்களுக்குள் மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.