ஜெ. படம், நினைவிட வழக்கு... தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!
அரசு அலுவலகங்களில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரியும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அரசு அலுவலகங்களில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரியும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த 5 மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களும் நேரில் ஆஜராகாததால் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு இறந்து போனதால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது உருவப்படத்தை அரசு அலுவலகங்கள், சட்டசபை வளாகத்தில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இதே போன்று ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த 5 வழக்குகளும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 5 வழக்குகளை தொடர்ந்தவர்கள் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.