கரூர், திண்டுக்கல்லில் இந்த ஆண்டும் சேவல் சண்டை நடத்த தடை: அனுமதி கோரிய மனு தள்ளுபடி
மதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் வீர விளையாட்டுக்கள் களைகட்டும். ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை, மஞ்சு விரட்டு ரேக்ளா ரேஸ் பண்டிகைகள் நடைபெறுவது வாடிக்கை. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து மதுரை, திருச்சி, சிவகங்கை, கோவை மாவட்டங்களில் இளைஞர்கள் மத்தியில் உற்சாகம் களைகட்டியுள்ளது.
இந்த நிலையில் சேவல் சண்டை நடத்த அனுமதி கேட்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குஜிலியம்பாறை எல்.புதூரைச் சேர்ந்த சுப்பிரமணியன், என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் எங்கள் ஊரில் பொங்கல் விழாவை ஒட்டி பல ஆண்டுகளாக கோழிச் சண்டை நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பொங்கல் விழாவை ஒட்டி கோழிச் சண்டைக்கு அனுமதி கேட்டு போலீஸாரிடம் மனு அளித்தோம். ஆனால், போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் கோழிச் சண்டைக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கரூரில் சேவல் சண்டை விழிப்புணர்வு கூட்டம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்துறை சார்பில் சேவல்சண்டை தடை செய்யப்பட்டுள்ளது குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, விஜயகுமார், ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேயின் உத்தரவின் படி கரூர் மாவட்ட பகுதிகளில் சேவல் சண்டை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிலும், எல்லைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளிலிலும் சேவல் சண்டை நடத்த கூடாது. அவ்வாறு சேவல் சண்டை நடத்த உத்தேசமாக உள்ள நபர்கள் குறித்தும் சேவல் சண்டைக்கு சேவல்களை தயார் படுத்திவரும் நபர்கள் குறித்தும் காவல் நிலையத்திற்கோ, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.