ஜெ. படத்தை அகற்றிய வழக்கு: விஜயகாந்தை கைது செய்ய தடையை நீட்டித்த ஹைகோர்ட்
மதுரை: தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சேதப்படுத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 25-ஆம் தேதி வரை தேமுதிக தலைவர் விஜயகாந்தை கைது செய்யத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கடந்த மாதம் 28ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மேடைக்கு எதிரே இருந்த நிழற்குடையில் முதலமைச்சர் ஜெயலலிதா படம் இருந்தது. அதனை விஜயகாந்த் கூறியதற்கிணங்க, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேமுதிகவினர் அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்த தேமுதிக பேனர்களை கிழித்தனர். இதனால் அதிமுகவினர் மற்றும் தேமுதிகவினர் இடையே பிரச்சினை வெடித்தது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அதிமுக எம்எல்ஏ ரங்கசாமி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, தன்னை கைது செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 5-ஆம் தேதி வரை விஜயகாந்தை கைது செய்ய ஏற்கெனவே தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளிக்க அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, ஜனவரி 25-ஆம் தேதி வரை விஜயகாந்தை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டார். விஜயகாந்த் சார்பாக வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜரானார்.