தங்க முறைகேடு: ஸ்தபதி முத்தையாவை கைது செய்ய ஹைகோர்ட் தடை - நிபந்தனை முன் ஜாமீன்
ஸ்தபதி முத்தையாவை கைது செய்ய ஹைகோர்ட் தடை விதித்து நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை: ஸ்தபதி முத்தையாவை கைது செய்ய தடை விதித்த உயர்நீதிமன்றம், 10 நாட்கள் திருச்சி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் உத்தரவிட்டு முன்ஜாமின் வழங்கியுள்ளது.
ஸ்தபதி முத்தையாவுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. 10 நாட்கள் திருச்சி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் உத்தரவிட்டு முன்ஜாமின் வழங்கியுள்ளது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தலைமை ஸ்தபதி முத்தையா திடீரென தலைமறைவானார். அவரை 93 கிலோ தங்கம் மோசடி செய்த வழக்கில் போலீசார் தேடி வருகின்றனர். பழமை வாய்ந்த கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் உள்ள பழைய உற்சவர் சிலையை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி, சிலைசெய்ய பக்தர்களிடம் இருந்து பெறபட்ட தங்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை என்ற பக்தர் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் சிலை செய்வதில் 5.75 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், பரத்குமார், வினோத்குமார், சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு நடைபெற்றது. சோதனையில் புதியதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலையில் தலைமை ஸ்தபதி முத்தையா கொடுத்துள்ள அறிக்கையின்படி 5.75 கிலோ தங்கம் இல்லை என தெரியவந்தது. மேலும் பழைய உற்சவர் சிலையில் 87 கிலோ தங்கம் இருப்பதாக தலைமை ஸ்தபதி முத்தையா அறிக்கையில் தெரிவித்திருந்தார். அந்தச் சிலை ஆய்வு நடத்தியதில் அதிலும் தங்கம் இல்லை என்பது உறுதியானது. எ
எனவே இந்த வழக்கு சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டதால் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் 2 முறை நேரடியாக வந்து செயல் அலுவலர் மற்றும் கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைமை ஸ்தபதி முத்தையாவிடம் விசாரணை செய்ய தனிப்படை போலீசார் சென்றபோது தலைமை ஸ்தபதி முத்தையா தலைமறைவானார். ஐஜி பொன். மாணிக்கவேல் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு முத்தையா ஸ்தபதி இரு தினங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, முத்தையா சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க எப்போதும் தயாராக இருக்கிறார் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வக்கீல் எமிலியாஸ், இது மிகப்பெரிய மோசடி. போலீஸ் காவல் விசாரணை முக்கியமாகும் என்றார்.இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரர் விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ளாரே என்றார். அதற்கு அரசு தரப்பு, சாட்சிகளின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குமுலங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார். இதைக்கேட்ட நீதிபதி விசாரணையை இன்று ஒத்தி வைத்தார்.
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, முத்தையா ஸ்தபதியை கைது செய்ய தடை விதித்தார். ஸ்தபதி முத்தையா 10 நாட்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்தபதி முத்தையாவுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. 10 நாட்கள் திருச்சி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் உத்தரவிட்டு முன்ஜாமின் வழங்கியுள்ளது.