நீங்கள் செய்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது: சன் டிவியை சாடிய ஹைகோர்ட் நீதிபதி!
சென்னை: கேபிள் டிவி தொழிலில் ஏகாதிபத்தியமாக செயல்பட்டு மற்றவர்களை பாதிப்படைய செய்தீர்கள்...அந்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது என்று சன் டிவி குழுமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் சாடியுள்ளார்.
சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விட்டல் சம்பத் குமரன் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது அவர், கல் கேபிள்ஸ் நிறுவனத்தாரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.
''கேபிள் டிவி தொழிலில் நீங்கள் ஏகாதிபத்தியமாக செயல்பட்டு வந்தீர்கள். இந்த தொழிலில் ஈடுபட்ட மற்றவர்களை பாதிப்படைய செய்தீர்கள்; அரசு கேபிள் டிவிக்கு கூட உரிமம் வழங்க விடாமல் தடுத்தீர்கள்.
கடந்த காலத்தில் மத்தியில் உங்கள் அரசு இருந்தது; இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் செய்த கர்மம் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வரும் என்று எதிர்பார்த்தீர்களா? என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார்.
இதனால் நீதிமன்றத்தில் சன் டிவி குழும வழக்கறிஞர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.