முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை
மதுரை: வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது.
நெல்லை வேளாண்மைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, கடந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட 7 பேரிடம் தலா ரூ.1.75 லட்சம் வீதம் பணம் வசூலித்து தருமாறு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் வற்புறுத்தியதால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
நெருக்கடி அதிகரித்ததால், மார்ச் 5ம் தேதி கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதற்கு அடுத்தநாளே அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கு விசாரணை, மார்ச் 9ம் தேதி சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தனி உதவியாளர்கள் மற்றும் வேளாண் துறையில் ஓட்டுநர் பணிகளை பெற்றவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏப்ரல் 5ம் தேதி காலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேளாண் அதிகாரி முத்துகுமராசாமி தற்கொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி, லஞ்சம் கேட்டதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும், தற்கொலை செய்த முத்துகுமாரசாமி தற்கொலை கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி ரவி தெரிவித்தார்.