கீழடியில் 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தேவை... ஹைகோர்ட் நீதிபதிகள் கருத்து!
கீழடியில் 4ம் கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை : கீழடியில் 4ம் கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் பண்டையக் கால நாகரீக நகரம் ஒன்று நிலத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றும், இவை பழங்காலத் தமிழகர்கள் பயன்படுத்தியப் பொருட்கள் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழடியில் 4வது அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடர வேண்டும் என்று கனிமொழிமதி என்பவர் மதுரைக்கிளை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் உள்ளிட்டோர் கீழடியில் நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கில் நாளை விரிவான உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் கீழடியில் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கீழடி தென்பகுதியில் உள்ள நில உரிமையாளர்கள் பெயர் மற்றும் சர்வே எண்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நில உரிமையாளர்களை எதிர்மனுதாரராக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் அகழ்வாராய்ச்சி பணி நீட்டிப்பு தொடர்பாக மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.