ஹைகோர்ட் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.. அதிகாரிகள் மீது பாய்ந்த அவமதிப்பு வழக்கு!
உள்ளாட்சி தேர்தலை நீதிமன்ற உத்தரவுபடி நடத்தாததால் மாநில தேர்தல் ஆணையர் உள்பட 6 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மாநில தேர்தல் ஆணையர் உள்பட 6 அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு பாய்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு முறையில் சரியான விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ரத்து செய்தது.
மேலும் அதே ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, மே மாதம் 14-ந் தேதிக்குள் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஜூலை மாதமாகிவிட்ட போதும் உள்ளாட்சி தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மே 14-ந் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, ஹைகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர் மகரபூஷனம், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மீது நீதிமன்றஅவமதிப்பு கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் உள்ளிட்ட 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.