அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்... ஹைகோர்ட்டில் சேகர் ரெட்டி மனு!
அமலாக்கத்துறை தன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்பட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை : தன் மீதான அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்யக் கோரி தொழிலதிபர் சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு ஹைகோர்ட் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சில நூறு கோடி ரூபாய்க்கு ரொக்கப் பணமும், நகைகளும் கண்டு பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. பெட்டி, பெட்டியாக இருந்த நகை, பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆயவு செய்த போது ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
வங்கியின் சீல்கள் கூட அகற்றப்படாமல், அச்சடிக்கப்பட்ட இடத்தில் இருந்து அப்படியே அவை கட்டு, கட்டாக வந்திருப்பதை கண்டு அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இதனையடுத்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் சேகர்ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கொல்கத்தா தொழில் அதிபர் பரஸ்மால் லோதா ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.
இதே போன்று அமலாக்கத்துறையும் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளது. இந்நிலையில் தங்கள் மீது அமலாக்கத்துறை போட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சேகர் ரெட்டியின் மனுவிற்கு 2 வாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.