ஜெ. வைத்த கைரேகையை தாக்கல் செய்ய பெங்களூரு சிறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
ஜெயலலிதாவின் கை ரேகையை தாக்கல் செய்ய பெங்களூரு சிறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பெங்களூரு சிறையில் ஜெயலலிதா வைத்த கை ரேகையும் அப்பல்லோவில் வைத்த கைரேகையும் ஒன்றுதானா என அதிரடியாக ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்காக பெங்களூரு சிறை நிர்வாகடத்திடம் ஜெயலலிதா கை ரேகையை கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கான வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதா கைரேகை போலி என திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வருகிறார்.
இன்றைய வழக்கு விசாரணையின் முடிவில், பெங்களூரு சிறையில் ஜெயலலிதா கைரேகையுடன் இடைத் தேர்தலுக்காக அப்பல்லோவில் ஜெயலலிதா வைத்த கைரேகையை ஒப்பிட சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஜெயலலிதாவின் கைரேகையை அனுப்ப பெங்களூரு சிறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் ஆதார் அட்டை கைரேகைகளையும் வரும் 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகம் கமிஷன் முன்பும் இந்த பிரச்சனையை சரவணன் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.