உள்ளாட்சி தேர்தல் எப்போது?: மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் கேள்வி
உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணையை வெளியிடுவது தொடர்பாக செவ்வாய்கிழமைக்குள் இறுதி முடிவை அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் இறுதிக்குள் நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறியதற்கு அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபார் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி , உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட விதம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்துக்கு எதிராக உள்ளது. சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், பஞ்சாயத்து சட்டவிதிகளை பின்பற்றி தேர்தல் அறிவிப்பாணையை புதிதாக வெளியிடவேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று உள்ளாட்சித் தேர்தலை நடத்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிடப்பட்டது. அதன்பின், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இதுவரை மூன்று முறை விசாரணை நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் பலமுறை அவகாசம் கேட்டுள்ளது. இதனிடையே இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை வெளியிடுவது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகள், உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என தெரிவித்தனர். அவகாசம் அளிக்க மறுத்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் செவ்வாய்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தனர். செவ்வாய்கிழமைக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை குறித்த இறுதி முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.