தரமற்ற மதுவிற்பனை விவகாரம்: மதுபான ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
தரமற்ற மதுவிற்பனைக்குத் தடை கோரும் வழக்கில் மதுபான ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை :தரமற்ற மதுவிற்பனைக்குத் தடை கோரும் வழக்கில் மதுபான ஆலைகளில் ஆய்வு நடத்தி அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கலப்பட மது விற்பதை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீராம் என்பவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார். அதில், தான் வாங்கிய மதுவை அருந்தியதால் வயிற்றுவலி வாந்தி பேதி ஏற்பட்டதாகவும், அதை ஆய்வுக்கு அனுப்பிய போது டார்டாரிக் அமிலம் அதிக அளவில் இருப்பதும் தெரியவந்தது.
அதனால் தரமற்று மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் டாஸ்மாக்கிற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களில் தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து டிசம்பர் 22-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.