ஓட்டத்தில் ஒரு நொடி லேட் ஆனதால் நிராகரிக்கப்பட்ட திருநங்கைக்கு இன்டர்வியூவில் பங்கேற்க அனுமதி
சென்னை: சப் - இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கான நேர்முக தேர்வில் திருநங்கை பங்கேற்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி தாமதமாக வந்ததை காரணம் காட்டி நேர்முகத் தேர்வில் பங்கேற்க திருநங்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கை கே.பிரித்திகா யாசினி என்பவர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் பிறக்கும்போது ஆணாக பிறந்தேன். பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி பட்டப்படிப்பில் என் பெயர் கே.பிரதீப் குமார் என்று சான்றிதழில் இருந்தது. பின்னர், என் உடலில் ஏற்பட்ட பெண்மை மாற்றத்தை தொடர்ந்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தேன். எனக்கு திருநங்கை என்ற சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ‘ஆன்லைன்' மூலம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி விண்ணப்பம் செய்தேன். அப்போது என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நான் படித்த பெரியார் பல்கலைக்கழகம் எனக்கு தற்போதைய பெயரில் கல்விச் சான்றிதழை மாற்றித் தரவில்லை.
எனவே, சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் என்னை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து திருநங்கை யாசினிக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கினார். பின்னர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டார்.
உடல் தகுதி தேர்வு
நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த மே மாதம் 23ம் தேதியும், காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு 24ம் தேதியும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்டு 3ம் தேதி முதல் 5ம்தேதி வரை உடல் திறன் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
ஒரு நொடி தாமதம்
இதில் நூறு மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை ஒரு நொடி தாமதமாக கடந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினி, சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுப்படி தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான நேர்முக தேர்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மாதம் 5 முதல் 28ம் தேதி வரை சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான காலியிடத்துக்கு நேர்முக தேர்வு நடப்பதால் அதில் கலந்து கொள்ள அனுமதி கோரியிருந்தார்.
நீதிபதிகள் உத்தரவு
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் தலைமையிலான முதல் பெஞ்சின் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
சமூக ரீதியாகவும், கல்வி அடிப்படையிலும் திருநங்கையரை பிறபடுத்தப்பட்டவர்களாக கருத வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததை பிரித்திகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சுப்பராயன் சுட்டிக்காட்டினார்.
அனுமதி அளித்து உத்தரவு
இதன் அடிப்படையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான நேர்முக தேர்வில் பங்கேற்க பிரித்திகாவுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என அவர் வாதாடினார். இதையடுத்து, நேர்முக தேர்வில் கலந்து கொள்ள பிரதிகாவை அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முதல் பெஞ்ச் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரித்திகாவின் மூல மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.