தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை பகல் 1 மணிக்கு தீர்ப்பு!
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியே கடிதம் அனுப்பினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதல்வராக ஏற்கவும் தயார் எனவும் அக்கடிதத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.