நேரடியாக ஹைகோர்ட்டில் ஜாமீன் கேட்ட "ஆடி கார்" ஐஸ்வர்யா.. மனு அதிரடி தள்ளுபடி!
சென்னை: குடி போதையில் கார் ஒட்டிய விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான ஐஸ்வர்வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல் ஜாமீன் மனு தாக்கல் செய்ததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வர்த்தக ஆலோசர் வில்சனின் மகள் ஐஸ்வர்யா. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார்.
'வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் நண்பர்களோடு குடித்திருக்கிறார். மறுநாள் அதிகாலையில் தரமணி வழியாக அதிக வேகத்தில் காரை ஓட்டுக் கொண்டு வந்தவர், முனுசாமி என்ற தச்சுதொழிலாளி மீது காரை மோதியிருக்கிறார்.
இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள், தங்களது இரு சக்கர வாகனத்தில் அந்த காரை விரட்டிச் சென்று, அந்த காரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து பொதுமக்கள், கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மதுபோதையில் நின்ற ஐஸ்வர்யா உள்ளிட்ட 3 பெண்களை பிடித்துச் சென்றனர்.
மேலும் முனுசாமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீஸார் ஐஸ்வர்யாவை கைது செய்து மதுபோதையில் வாகனம் ஓட்டியது, மரணத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை அதிக வேகமாக ஓட்டியது உள்ளிட்ட 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
ஐஸ்வர்யா, சைதாப்பேட்டை 18ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சனிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார், ஐஸ்வர்யாவை புழல் பெண்கள் சிறப்பு சிறையில் அடைத்தனர்.
முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது திருவான்மியூர் டி.டி.கே காலனி. அந்தக் குடும்பமே முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறது. அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் திவ்யா 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை உயநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததாகக் கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.