பேனர் வைக்க விதித்த தடையை நீக்க முடியாது... ஹைகோர்ட் மறுப்பு!
உயிரோடு இருப்பவர்களின் படத்தை பேனர்களில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை : உயிரோடு இருப்பவர்களின் படத்தை பேனர்களில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தனி நீதிபதி விதித்த தடை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த திரிலோக சுந்தரி என்பவர் தெனது வீட்டிற்கு எதிராக சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எதிர்த்து மாநகராட்சியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறி இருந்தார். இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் தனி நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் முழுவதும் உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், நீதிபதி ரவிச்சந்திர பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
எல்லா விளம்பரங்களுமே உயிரோடு இருப்பவர்களை வைத்தே உருவாக்கப்படுவதாக தெரிவித்தார். பேனரில் உயிரோடு இருப்பவர்களின் படத்தை பயன்படுத்த விதிக்கப்ப்டட தடையானது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. மாடல் நபர்களை பயன்படுத்தின் தான் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதாகவும், பேனர், கட்அவுட்களை வைப்பதால் அரசுக்கு வருவாய் தான் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் பேனர், கட்அவுட் வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பும் விசாரணையில் உள்ளதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று சொன்ன நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.