நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் யுவராஜ்: ஜாமீன் நிபந்தனையை மாற்றிய ஹைகோர்ட்
சென்னை : கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜின் ஜாமீன் நிபந்தனையில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை காவல்நிலையத்திற்கு பதில் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் யுவராஜ் கையெழுத்து போட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த ஆண்டு ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ், வாட்ஸ் மூலம் வாய்ஸ் கொடுத்து வந்தார். ஒருவழியாக கடந்த ஆண்டு அக்டோபரில் நாமக்கல் சிபிசிஐடி போலீசில் சரண் அடைந்தார்.
நிபந்தனை ஜாமீன்
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட யுவராஜ் பின்னர் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் மனுத்தாக்கல் செய்ததன்பேரில், நீதிமன்றம் அவருக்கு கடந்த 3ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நெல்லையில் யுவராஜ்
யுவராஜ் நெல்லை டவுண் போலீஸ் நிலையத்தில் காலை, மாலை கையெழுத்திடவும் நிபந்தனை விதித்தது. அதன்படி, கடந்த 2ம்தேதி முதல் யுவராஜ் நெல்லையில் தங்கி கையெழுத்திட்டு வருகிறார். இதற்காக முதலில் பாளை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார்.
கொல்ல சதி
நெல்லையில் யுவராஜை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து யுவராஜின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஹோட்டலில் இருந்து டவுண் போலீஸ் நிலையத்துக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார் யுவராஜ்.
பாதுகாப்பு அதிகரிப்பு
யுவராஜுக்கு கூடுதல் போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேரோட்டத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கவே, யுவராஜ் இருப்பிடத்தை போலீசார் மீண்டும் மாற்றினர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே யுவராஜ் தனது ஜாமீன் நிபந்தனையில் மாற்றம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. யுவராஜ் நெல்லை காவல்நிலையத்திற்கு பதிலாக சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் தினசரி கையெழுத்து போட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.