குட்கா ஊழல்: சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
குட்காவை முறைகேடாக விற்பனை செய்ய அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சிபிஐ விசாரணை கேட்டு மனுத் தாக்கல் செய்தார். எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்று விற்பனைக்கு அனுமதியளித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற போது, குட்கா முறைகேடு வழக்கில் டி.ஜி.பி. மற்றும் மத்திய மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டார்.
வருமான வரித்துறையிலிருந்து தலைமை செயலாளர், டிஜிபிக்கு ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேடுக்கு துணைபுரிந்த அனைத்து அதிகாரிகளையும் பாதுகாக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் பாதுகாக்க நினைக்கிறது.
4 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேச தொடர்புடைய வழக்கு என்பதால் சிபிஐ-க்கு உகந்தது. ஹவாலா பணபரிமாற்றம் நடந்துள்ளதாக கலால் வரித்துறை தெரிவித்துள்ளதால், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புதுறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், பிற மாநில அதிகாரிகள், உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் என பலருக்கும் தொடர்பு உள்ளது. இவர்களின் விசாரணையை நாங்கள் குறைசொல்லவில்லை. ஆனால் பிற மாநில அதிகாரிகள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள அதிகாரிகள் டிஜிபிக்கு அறிக்கை அளிக்க வேண்டியதில்லை என்றாலும், அவருக்கு கீழான அந்தஸ்தில் உள்ளவர்கள் தான். டிஜிபிக்கு கீழ் உள்ளவர்களால் எப்படி டிஜிபிக்கு எதிராகவோ, அமைச்சருக்கு எதிராகவோ நடவடிக்கை எடுக்க முடியும். எனவே சிபிஐ விசாரணையே சிறப்பானது என்று அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
குட்கா ஊழல் புகார் தொடர்பான விசாரணை சரியான பாதையில் செல்வதால், குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மட்டும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், வாதிட்டார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஷ் அமர்வு, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இன்று மத்திய அரசு தவிர்த்து மற்ற இரு தரப்பும் எழுத்துப் பூர்வமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.