பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்களின் விடுதலை செல்லாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சன் குழுமத்திற்காக பிஎஸ்என்எல்லின் அதிவேக இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இதுகுறித்து பதில் அளிக்கும்படி சிபிஐயிடம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் கடைசியாக நடந்த விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி, விடுவித்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் மொத்தம் 4 பேருக்கு மட்டுமே விடுதலை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் இந்த தீர்ப்பிற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ தரப்பில் செய்யப்பட மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி நீதிபதி ஜெயச்சந்திரன் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், 7 பேரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.