சட்டமன்ற குழுக்கள் அமைக்க கோரி ஸ்டாலின் வழக்கு- ஓபிஎஸ் பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ்
சட்டமன்ற குழுக்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: சட்டமன்ற குழுக்கள் அமைக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டமன்ற குழுக்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று சட்டமன்ற செயலாளருக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக சட்டசபை விதிகளின்படி, பொதுக்கணக்குக்குழு, பேரவை விதிகள் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, நூலகக் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இக்குழுக்கள் மூலம் பேரவை நம்பகத் தன்மையுடனும், சிறப்பாகவும் செயல்பட முடியும்.
வழக்கமாக புதிய பேரவை அமைக்கப்பட்டு, முதல் கூட்டம் தொடங்கிய 15 நாட்களுக்குள் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த 15வது பேரவை மே மாதம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 மாதங்களாக பேரவைத் தலைவர் எந்த குழுவையும் அமைக்கவில்லை.
வழக்கமாக இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு ஓர் ஆண்டு செயல்படும். அதன் பின், ஒவ்வொரு நிதியாண்டின் போதும் மாற்றி அமைக்கப்படும். பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரை பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பேரவைத் தலைவர் நியமிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தேர்வாகியுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
திமுகவில் 89 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், குழுக்களில் அதிகளவு திமுக உறுப்பினர்களை நியமிக்க வேண்டி வரும். எனவே தான், ஆளுங்கட்சியின் அழுத்தத்தால் பேரவைக் குழுக்களை அமைக்காமல் பேரவைத் தலைவர் காலம் தாழ்த்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக, கடந்த அக்டோபர் மாதம் அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வத்தை திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து, குழுக்கள் அமைப்பது தொடர்பாக மனு அளித்தனர். அதன் பின்னும் இதுவரை அமைக்கப்படவில்லை. குழுக்களை அமைக்காமல், பேரவை விதிகளை பேரவைத் தலைவரே மீறி வருகிறார். பேரவைத் தலைவர் பேரவையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர். அவையின் விதிகளின்படி தனது பணியை செய்து, ஜனநாயக மரபுகளை காப்பாற்ற வேண்டும். ஆனால், அவர் இதுவரை விதிகளின் படி குழுக்களை அமைக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, விரைவாக குழுக்களை அமைக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று டிசம்பர் 3ஆம் தேதி ஆளுநரை சந்தித்தும் மனு அளித்தனர்.
சட்டமன்ற குழுக்கள் அமைக்கப்படுவதில் காலம் தாழ்த்தப்படவே, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஸ்டாலின். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. சட்டமன்ற குழுக்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று சட்டமன்ற செயலாளருக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.