டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவின் தந்தை போட்ட வழக்கு.. விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த செப்டம்பர் 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தந்தை மனு தாக்கல்
இந்த நிலையில் விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவில், "என்னுடைய மகள் விஷ்ணுபிரியா, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில், சில உயர் அதிகாரிகள், தனக்கு கடுமையான நெருக்கடியை தருவதாக எங்களிடம் கூறினாள்.
உயரதிகாரிகள் நெருக்கடி
இதற்கிடையில், என் மகளை போனில் தொடர்பு கொண்ட நாமக்கல் போலீஸ் எஸ்.பி. செந்தில்குமார், சரக டிஐஜி வித்யாகுல்கர்னி ஆகியோர் உடனடியாக திருச்செங்கோட்டிற்கு புறப்பட்டு வரும்படி என் மகளுக்கு உத்தரவிட்டனர். அப்போது என் மகள் புறப்படும்போது, ‘கோகுல்ராஜ் கொலையில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தன்னை வற்புறுத்துவதாகவும், இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்புவதாகவும் கூறிவிட்டு சென்றார்.
எஸ்.பி செந்தில்குமார்
இந்நிலையில், நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமார், எனக்கு போன் செய்து விஷ்ணுபிரியாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனே புறப்பட்டு வாருங்கள் என்று கூறினார். நாங்கள் புறப்பட்டு கொண்டிருந்தபோது, மீண்டும் போன் செய்து, விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தன்னை மன்னிக்க வேண்டும் என்று விஷ்ணுபிரியா எழுதி வைத்துள்ளார் என கூறினார்.
கடிதம் சிக்கியது எப்படி?
விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதால், தான் நேரடியாக சென்று கதவை உடைத்து திறக்க உள்ளதாகவும் போலீஸ் அவர் கூறினார். ஆனால், பூட்டப்பட்டுள்ள அறைக்குள் உள்ள விஷ்ணுபிரியா எழுதிய கடிதம், கதவை திறப்பதற்கு முன்பாகவே எப்படி எஸ்.பி.க்கு கிடைத்தது? என்ற சந்தேகம் என் மனதில் ஏற்பட்டது.
சேலம் கொண்டு போனது ஏன்?
திருச்செங்கோட்டிற்கு நாங்கள் செல்வதற்கு முன்பே, என் மகளின் உடலை போலீசார் மீட்டு சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல், சேலத்துக்கு ஏன் கொண்டு சென்றீர்கள்? என்று கேட்டபோது, சேலத்தில்தான் குளிர்சாதன வசதிகள் உள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
பிரேத பரிசோதனை
பிரேத பரிசோதனைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அதை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் செயல்பட்டனர். என் மகள் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரங்கள், தோடுகளை போலீசார் எங்களிடம் ஒப்படைக்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வண்டி இருந்தும், அதில் ஏற்றாமல் மற்றொரு வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிவிட்டார்.
என் மகளின் கையெழுத்து இல்லை
மேலும், தற்கொலை சம்பவம் நடந்த அறைக்குள் சென்ற எஸ்.பி. செந்தில்குமார், என் மகளின் செல்போன்கள், லேப்டாப், கேமிரா உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார். என் மகள் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள், அவள் எழுதியது இல்லை.
அதிகாரிகள் தலையீடு
என் மகள் கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து விசாரித்தபோது, தமிழக டிஜிபி அலுவலகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், பலமுறை போனில் பேசியுள்ளார். இந்த வழக்கில் மாவட்ட எஸ்.பி. டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகளின் தலையீடு உள்ளதால், என் மகள் தற்கொலை குறித்து நடைபெறும் சிபிசிஐடி விசாரணை நியாயமானதாக இருக்காது என்று நினைக்கிறேன்.
மகளின் மர்ம மரணம்
இந்த வழக்கின் வேகத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், தவறான தகவல்களையும் போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர். இதுதவிர, என் மகள் நேர்மையான, தைரியமான பெண் ஆவார். அவர் தற்கொலை செய்யும் முடிவு எடுக்க வாய்ப்பே இல்லை. எனவே, விஷ்ணுபிரியா மர்மச்சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசுக்கு நோட்டீஸ்
இந்த மனு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தற்போதைய சூழ்நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.