3 ஆண்டு சட்டப்படிப்பை நிறுத்த வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவுக்கு ஹைகோர்ட் அதிரடி தடை!
சென்னை: 3 ஆண்டுகால சட்டப்படிப்பை நிறுத்த வேண்டும் என்ற தனிநீதிபதி கிருபாகரனின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தடை விதித்துள்ளது. மேலும் அகில இந்திய பார்கவுன்சிலை நிர்வகிக்க குழு அமைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எஸ்.எம்.ஆனந்தமுருகன் என்பவர், குற்றப்பின்னணி உள்ளவர்கள், வெளிமாநிலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்குள் வருவதை தடை செய்யவேண்டும் என்று ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை சிறப்பு வழக்காக எடுத்து விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன் பல அதிரடி உத்தரவுகளை கடந்த 6-ந் தேதி பிறப்பித்திருந்தார். அதில் 3 ஆண்டுகால சட்டப்படிப்படை நிறுத்த வேண்டும்; அகில இந்திய பார் கவுன்சிலை நிர்வகிக்க குழு அமைக்க வேண்டும்; கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையோரை சட்டப்படிப்பில் சேர்க்கக் கூடாது என பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே கட்டாய ஹெல்மெட் உத்தரவை பிறப்பித்தவர். இந்த நிலையில் 3 ஆண்டுகால சட்டப் படிப்பை நிறுத்த வேண்டும்; பார்கவுன்சிலை நிர்வகிக்க குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த 3 ஆண்டுகால சட்டப்படிப்பை நிறுத்த வேண்டும்; பார்கவுன்சிலை நிர்வகிக்க குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவுகளுக்கு தடை விதித்தது.