எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை!
மதுரை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் 'கொற்கை' நாவலில் மீனவப் பெண்களை தவறாக சித்தரித்து எழுதியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
மீனவர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அலங்கார பாதர் என்பவர் தூத்துக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜோ டி குரூஸ் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கில், குரூஸின் சாகித்ய அகாடமி விருது பெற்ற கொற்கை நாவலில் மீனவர் பெண்களைப் பற்றியும் கிறித்துவ பாதிரியார்களையும் அவதூறாக எழுதியிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், ஜோ டி குரூஸை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஜோ டி குரூஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நான் எழுதியுள்ள ‘கொற்கை' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இந்த நாவலில் மீனவப் பெண்களை பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகவும், கிறிஸ்தவ மத போதகர்களை கேவலமாக வர்ணித்துள்ளதாகவும் கூறி என் மீது மீனவர்கள் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் அலங்கார பரதர் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘கொற்கை' நாவலில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கவில்லை. மனுதாரரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. ‘கொற்கை' நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளாமல் கீழ்நீதிமன்றம் என் மீதான வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். நான், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் என்னால் ஒவ்வொரு விசாரணையின் போதும் கோர்ட்டில் ஆஜராக இயலாது. எனவே, நீதிமன்றத்தில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.