ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை
சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம் குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், பிரேத பரிசோதனையை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும், பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பிலிருந்து சிலர் உடனிருக்க வேண்டும் என ராம்குமாரின் வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், இந்த மனுவை மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாகவும்,உயர்நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அத்துடன் நேற்று மதியம் 2.15 மணிக்கு அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் மனுவை விசாரித்த நீதிபதிகள்,சில நிபந்தனைகளோடு ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளனர். 4 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனையில் ஈடுபட வேண்டும் எனவும்,பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக படம்பிடிக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு, ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றார்.
இந்த பிரேத பரிசோதனைக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் தனது மகனின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று ராம்குமாரின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.