தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை!
சென்னை: தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் உள்ளிட்ட பலர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், பக்ரீத் பண்டிகைக்காக தமிழகத்துக்கு ஒட்டகங்கள் கொண்டுவந்து வெட்டப்படுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் குற்றம். ஆகையால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்ததது.
அப்போது, ஆடுகளை வெட்டுவது போல ஒட்டகங்களுக்கும் பிரத்யேக அறுவைக் கூடங்கள் இருந்தால் மட்டுமே அதை அனுமதிக்க முடியும். தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்டுவதற்கென தனியாக அறுவைக்கூடங்கள் இல்லை. ஆகையால் ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்க முடியாது.
இந்த வழக்கில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என அனைவரும் தங்களது வாத, பிரதிவாதங்களை 3 பக்கத்திற்கு மிகாமல் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை அக்டோபர் 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.