மது விற்பனை நேரத்தைக் குறைக்க பரீசிலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது... உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரத்தைக் குறைக்கக் கோரும் கோரிக்கைகளை பரீசிலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகள் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.எல்.ராஜா மது விற்பனை மூலம் அரசுக்கு மாதம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 4 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்
இதனைக் கேட்ட நீதிபதிகள் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாதென்றும் அரசியல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
டாஸ்மாக் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து அரசு தான் முடிவெடுத்து உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர்
குடிப்பழக்கத்திலிருந்து விடுபட மறுவாழ்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற யோசனைகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அதைப் பரீசிலிக்க அரசுக்கு உத்தரவிட முடியுமென்று கூறிய நீதிபதிகள் வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.