ஜெ. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. ஹைகோர்ட் நீதிபதிகளை டென்ஷனாக்கிய "டிராபிக்"!
தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும்; முதல்வர் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியியும் அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து பேசி ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விளக்கி வருகிறார்.
இந்த நிலையில் முதல்வர் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவை கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.
இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும், முதல்வர் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுபோன்ற மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக் காட்டிய தலைமை நீதிபதி, புதிய மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதுபோன்ற மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்த டிராபிக் ராமசாமிக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார். மீண்டும் மீண்டும் இதே போன்ற வழக்குகளை தொடரக்கூடாது என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.