மாயமான மதனைக் கண்டுபிடிக்க... போலீசாருக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: வேந்தர் மூவிஸ் மதனைக் கண்டுபிடிக்க போலீசாருக்கு மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 28 ம் தேதி கங்கையில் சமாதி அடையப் போவதாக கடிதம் எழுதிவைத்து விட்டு வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போனார்.
காணாமல் போன மதன் மீது ஏகப்பட்ட மோசடி வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகின. மேலும் மதனைக் கண்டுபிடித்துத் தருமாறு மதனின் மனைவி, தாயார் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
உயர்நீதிமன்றம்
இந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மதன் மாயமான வழக்கில் விசாரணை அதிகாரியாக துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காணாமல் போன மதனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதற்காக 2 வாரங்கள் அவகாசம் காவல்துறைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
விசாரணை
2 வாரங்கள் கடந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி, தன்னுடைய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் மதனைக் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த 4 வார கால அவகாசமும் கேட்டார்.
திருப்தி
ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள் '' கூடுதல் துணை கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையை படித்துப் பார்த்தோம். இந்த வழக்கு தொடர்பான சில விவரங்களை அவரிடம் நேரடியாக கேட்டறிந்தோம். இந்த வழக்கில் அவரின் விசாரணை எங்களுக்கு திருப்தியளிக்கிறது.
நடவடிக்கை
இந்த வழக்கில் உண்மைகளை வெளிக்கொணர அவர் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புகிறோம்.மதனைக் கண்டுபிடிக்க 4 வாரங்கள் துணை கமிஷனர் அவகாசம் கேட்டார். ஆனால் நாங்கள் 2 வாரங்கள் அவகாசம் கொடுத்திருக்கிறோம். இந்த வழக்கின் மீதான மறுவிசாரணையை ஜூலை 6ம் தேதி தள்ளி வைக்கிறோம்'' என்று கூறினர்.
ஐஜேகே நிர்வாகி
விசாரணையில் ஐஜேகே நிர்வாகி ராஜபாஷ்யத்திடம் ஏன் இன்னும் விசாரிக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் வெளிநாட்டில் இருப்பதால் விசாரிக்க முடியவில்லை. அவர் வந்ததும் விசாரணை நடத்தப்படும் என்று அரசு தரப்பில் பதிலளித்தாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரகசியம்
மேலும் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை வெளிப்படையாக வைத்தால் எதிர் தரப்பிற்கு தெரிந்துவிடும். எனவே சீல் வைத்து ரகசியமாக வைத்திருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸிடம், போலீசார் சமீபத்தில் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.