ஐபிஎல் போராட்டத்தில் போலீசாரை தாக்கிய வழக்கு.. சீமானுக்கு முன்ஜாமீன்.. கோர்ட் கூறிய நிபந்தனை இதுதான்
சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த கூடாது என்று தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சிறு கட்சிகள் கடந்த ஏப்ரல் 10ம் தேதி சேப்பாக்கம் பகுதியில் பெரும் போராட்டத்தை நடத்தினர். அப்போது சிலர் காவல்துறையினரை தாக்கியதாக வீடியோக்கள் வெளியாகியிருந்தன.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வழக்கு பாய்ந்தது.
இந்த வழக்கில் சீமான் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியான நிலையில், சென்னை ஹைகோர்ட்டில் சீமான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில், இன்று நீதிமன்றம் தனது உத்தரவை வெளியிட்டது.
இதன்படி, மதுரையில் தங்கியிருந்து அடுத்த 2 வாரங்களுக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் சீமான் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.