போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கை முறிப்பு.. எடுத்த நடவடிக்கை என்ன.. கமிஷனருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடத்திய போராட்டத்தில் பெண் ஒருவரின் கை முறிக்கப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: ஐஐடி வளாகத்தில் தாக்கப்பட்ட மாணவருக்காக நியாயம் கோரி போராடியவர்களில் பெண் ஒருவரின் கையை முறித்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் சூரஜ், மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தியதால் கொடூரமாக தாக்கப்பட்டார். பார்வை இழக்கும் அளவிற்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ள சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இயக்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியிலுள்ள ஐஐடி வளாக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கையை பெண் காவலர் ஒருவர் முறித்தார். பெண் காவலரின் இந்த செயல் ஒளிக் காட்சிகளாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் கை முறிக்கப்பட்டது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெண்ணின் கையை முறித்த காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.