ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கு... 8 விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்காதையடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், போக்குவரத்துத் துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த என்.லோகு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அளவுக்கு அதிகமாக வாடகைக் கட்டணத்தை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கின்றனர்.
எனவே, சென்னை மாநகருக்கு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்தது போல, கோவை மாநகருக்கும் திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் விலை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, உரிய உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும்.
அதிகக் கட்டண வசூல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கான இலவச தொலைபேசி எண்களுக்கு உரிய விளம்பரம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த இலவச தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆட்டோவிலும் இந்த எண்களும், கட்டண விவரமும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 விதிமுறைகளை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில், போக்குவரத்துத் துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.