ஹெல்மெட் அணிவதற்கு எதிரான வழக்கு - தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்!
சென்னை: தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.கோபாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "ஜூலை 1 ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் மோட்டார் சைக்கிள், அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக உள்துறை செயலாளர் கடந்த 18 ஆம் தேதி அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வாகனத்தை ஓட்டியவருக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அபராதம் மட்டுமே விதிக்க முடியும். வாகன பதிவுச் சான்றிதழை பறிமுதல் செய்யவேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் கூறவில்லை. மேலும், மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம், மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும்போது ஹெல்மெட்டும் சேர்த்து வழங்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால், அவ்வாறு ஹெல்மெட் வழங்கப்படுவதில்லை
மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 100 முதல் ரூபாய் 300 வரை அபராதம் விதிக்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளார். அதுவும், இந்த அபராதத்தை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்தான் விதிக்க முடியும்.
எனவே, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனத்தில் பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த 18 ஆம் தேதி தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரைக் காக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக விளம்பரத்திற்காக வழக்கு போடுவதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கோபாலகிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.