மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கும் பணி... மேலும் அவகாசம் வழங்கி சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அபாயகரமான மற்றொரு கட்டிடத்தை இடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் 20 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மழையின் போது கட்டுமான பணியின்போது 11 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பலியானார்கள் 27 பேர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டிடத்தை இடிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாகவும், கட்டிடத்தை இடிப்பதற்கு திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனும்தி ஜுலை 22 ம் தேதியுடன் காலவதி ஆகிவிட்டதால் புதுப்பிப்பதற்கு காவல் ஆணையரிடம் விண்ணபிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
தற்போது வரை 1,2,3,8,9 தளங்ககளில் வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றது. கட்டிடத்தின் எடையை குறைப்பதற்கு 5 வது தளத்தில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடிக்கும் பணி இன்னும் 15 இருந்து 20 நாட்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கட்டிடத்தை இடிக்க மேலும் 20 நாட்கள் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் பொதுநல வழக்குகளை தனித்தனியாக தொடர்ந்தனர். இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.