ஐஐடி போராட்டத்தில் மாணவி கை முறிப்பு.. உள்துறை செயலாளர், கமிஷ்னர் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
மாணவி இளவரசியின் கையை முறுக்கி காயப்படுத்தியது தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
சென்னை: ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவி இளவரசியின் கையை முறுக்கி காயப்படுத்தியது தொடர்பாக, உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் சூரஜ் மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தியதால் கொடூரமாக தாக்கப்பட்டார். பார்வை இழக்கும் அளவிற்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ள சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 31 ஆம் தேதி, புரட்சிகர மாணவர் முன்னணியினர் பலர் ஐ.ஐ.டி. வளாகம் முன்பு ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்கள் என்றும் பாராமல் போலீசார் தரதரவென சாலையில் இருந்து இழுத்து சென்றும், குண்டுகட்டாக தூக்கிச் சென்றும் காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் போது, பெண் காவலர் ஒருவர் இளவரசி என்ற மாணவியின் கையை முறுக்கி காயப்படுத்தியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அத்துமீறி நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜசேகர் என்பவர் தொடர்ந்து வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இளவரசியின் கையை காயப்படுத்தியது தொடர்பாக உள்துறை செயலளர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டடார் வழக்கு விசாரணை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.