தமிழகத்தில் ஜன. 1 முதல் இந்து கோயில்களில் நுழையும்போது இப்படித்தான் ட்ரெஸ் போடனும்-ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தமிழகத்தில் இந்து ஆலயங்களில் நுழையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிரடி உடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி பழையபாளையம் அக்கியம்பட்டியில் உள்ள செண்பக விநாயகர் கோயில் விழாவில் கிராமிய இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன் பிறப்பித்த அதிரடி உத்தரவு:
- கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களிலும் வழிபாட்டுக்கு செல்லும் போது தனி ஆடை கட்டுப்பாடு உள்ளது.
- தமிழகத்தில் இந்து கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அறநிலையத்துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
- தமிழகத்தில் இந்து கோயில்களில் ஜனவரி 1-ந் தேதி முதல் ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, வழக்கமான பேன்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும்.
- பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடை அணிந்து வரவேண்டும். ஸ்கர்ட்ஸ், லெக்கின்ஸ், ஜீன்ஸ் பேண்ட் அணிய தடை விதிக்கப்படுகிறது.
- போலீசார், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் சீருடையுடன் வர அனுமதிக்க வேண்டும்.
- இந்த ஆடை கட்டுப்பாட்டினை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும்.
- திருச்செந்தூர் உள்ளிட்ட பல கோயில்களில் ஆண்கள் மேலாடை அணிந்து வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆடை கட்டுப்பாடு தொடர்பாக அரசு முடிவெடுக்கும் வரை இந்த முறை தொடரலாம்.
- அறநிலையத் துறைக்கு கட்டுப்படாத கோயில்களில் அவர்களின் பாரம்பரிய ஆடை கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும்.
- வேறு ஆடைகள் அணிந்து வரும் பக்தர்களை கோயில்களுக்குள் போலீஸார் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு நீதிபதி வைத்யநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.