சன் டிவியின் கல் கேபிள் டிவி உரிமத்தை ரத்து- மத்திய அரசின் உத்தரவு செல்லாது: உயர் நீதிமன்றம்
சென்னை: கல் கேபிள் நிறுவனம் சார்பாக மத்திய அரசு அளித்த உத்தரவு செல்லாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல் கேபிள் நிறுவனத்தின் சென்னை, கோவை நகர ஒளிபரப்பு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை அளிப்பதற்கான எம்.எஸ்.ஓ.உரிமத்தை ‘கல்' கேபிள் நிறுவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில், ‘கல்' கேபிள் நிறுவனத்துக்கு ‘செக்யூரிட்டி கிளியரன்ஸ்' வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதால், அதற்கு வழங்கப்பட் டிருந்த எம்.எஸ்.ஓ. உரிமத்தை ரத்து செய்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த மாதம் 20-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘கல்' கேபிள் நிறுவனம் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளது. ‘எங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலும், எங்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்காமலும் உரிமத்தை ரத்து செய்தது செல்லாது. ஆகவே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றும் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள், நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், எம்.எஸ்.ஓ. உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான ரகசிய அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், "நாட்டின் பொருளாதார நலன்கள், பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டே ‘கல்' கேபிள் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது" என்று வாதிட்டார்.
‘கல்' கேபிள் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘கேபிள் டி.வி. ஒளிபரப்புக்கான சிக்னல்களை அளித்து வரும் ‘கல்' கேபிள் நிறுவனத்தால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது சரியல்ல'' என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று நீதிபதி ராமசுப்பிரமணியன், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். கல் கேபிள் நிறுவனம் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று கூறி உத்தரவிட்டார்.மேலும், கேபிள் நிறுவனம் மீது வேறு புகார்கள் இருந்தால் சட்டப்படி விசாரிக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.