டி.ஜி.பி. ராமானுஜத்திற்கு எதிரான திமுக வழக்கு… ஹைகோர்ட் தள்ளுபடி
சென்னை: டிஜிபி ராமானுஜத்திற்கு எதிராக திமுக தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடியும் வரை, தமிழக சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக அனூப் ஜெய்ஸ்வாலை நியமித்து கடந்த 5ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதேநேரம், ஏற்கனவே சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜம், தமிழக காவல்துறையின் நிர்வாக பணியை கவனிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு மாநிலத்தில், 2 டி.ஜி.பி.க்கள் இருந்தால், யாருடைய உத்தரவை கேட்டு செயல்பட வேண்டும் என்று கீழ் மட்ட போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும்.
எனவே, காவல்துறையின் நிர்வாக பணிகளை கவனிக்க டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன், அனூப் ஜெய்ஸ்வாலை டி.ஜி.பி.யாக நியமித்து பிறப்பித்த உத்தரவினை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
பின்னர் தன்னுடைய வாதத்தில், ‘தமிழகத்தில் டி.ஜி.பி. முதல் காவலர் வரை அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி. அனூப் ஜெய்ஸ்வாலின் கட்டுப்பாட்டில் தமிழக காவல் துறை செயல்படும். ஏற்கனவே டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜத்துக்கு மாற்றுப்பணி வழங்கினால், அது பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக அமைந்து விடும்' என்று கூறினார்.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர், மனுதாரர் தவறாகப் புரிந்து வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.