மனுதாரரிடம் வருத்தம் தெரிவித்த நீதிபதி... சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுதாரரிடம் நீதிபதி வருத்தம் தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: 24 ஆண்டுகள் காக்க வைத்ததற்காக, மனுதாரரிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கோரிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியம் என்ற பெண்மணியின் மகன் கடந்த 1993ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதியன்று நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவராக பணிபுரிந்து அவர், ஓட்டிச் சென்ற லாரி நேருக்கு நேராக, அரசுப் பேருந்து மீது மோதி, உருக்குலைந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகனின் சாவுக்கு, நஷ்ட ஈடு கோரி, மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் பாக்கியம் விண்ணப்பம் செய்யாமல், தவறுதலாக, ஊழியர் நஷ்ட ஈடு சட்டத்தின்கீழ், விண்ணப்பம் செய்துவிட்டார்.
பணியின்போது ஊழியர் இறந்தால், அவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற சட்ட நடைமுறை, ஆலைகளில் பணிபுரிவோருக்கே பொருந்தும். ஆனால், பாக்கியத்தின் மகன் லாரி விபத்தில் உயிரிழந்துவிட்டதால் அவரது மனுவை , அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
தீர்ப்பாயத்தில் வழக்கு
இதையடுத்து, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, லாரியின் காப்பீட்டு நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கக் கேட்டு, மோட்டார் வாகன விபத்துகளுக்கான தீர்ப்பாயத்தில், பாக்கியம் வழக்கு தொடர்ந்தார்.
கைவிரித்த இன்சூரன்ஸ் கம்பெனி
ஆனால், ஊழியர் நஷ்ட ஈடு சட்டத்தை தேர்வு செய்து, பாக்கியம் ஏற்கனவே மனு செய்துவிட்ட காரணத்தால், 2வது முறையாக, அவரது மனுவை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட லாரியின் காப்பீட்டுதாரரான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி கைவிரித்து விட்டது.
ரூ. 3.47 லட்சம் இழப்பீடு
எனினும், இதன்பேரில், பாக்கியத்திற்கு ரூ.3.47 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும்படி, அந்த லாரியின் உரிமையாளர் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம் இரண்டிற்கும், மோட்டார் வாகன விபத்துகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கைக்கு வராத இழப்பீடு
ஆனால், இதுவரையிலும், பாக்கியத்திற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மிகவும் மனமுடைந்த நிலைக்கு பாக்கியம் தள்ளப்பட்டார்.
நீதிபதி வருத்தம்
இந்த உத்தரவை எதிர்த்து, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதி சேஷசாயி முன்னிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கடந்த 24 ஆண்டுகளாக, அலைக்கழிக்கப்பட்டு வரும் பாக்கியத்திற்கு, உரிய நீதி கிடைக்காததற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.
அலைக்கழித்தது தவறு
ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை நிராகரித்து, அவனுக்கு உரிய நீதியை கிடைக்கச் செய்யாமல் இவ்வாறு அலைக்கழித்தது தவறு என்று குறிப்பிட்ட நீதிபதி சேஷசாயி, இதுபற்றி இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இழப்பீடு வழங்க உத்தரவு
உடனடியாக, இழப்பீட்டுத் தொகையை வழங்க ஆவண செய்யும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அவர் பரிந்துரையும் செய்தார். இந்த சம்பவம் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.