சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்கள் எவை? பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிலை கடத்தலை தடுப்பது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது கடந்த முறை நடத்தப்பட்ட விசாரணையின்போது, சிலைக் கடத்தலைத் தடுக்கும் வகையில், 3000க்கும் மேற்பட்ட கோயில்களில் பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் 2021 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் திருத்தப்பட்ட திட்ட அட்டவணை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள 242 கோயில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்டி முடிக்கப்படும். 2 வாரத்திற்குள் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நீதிபதி மகாதேவன், தமிழகத்தில் சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டர்.
மேலும், தமிழக அரசு முதல்கட்டமாக தஞ்சாவூர், பந்தநல்லூரில் உள்ள கோயிலில் சிலை பாதுகாப்பு அறை கட்ட வேண்டும். அறநிலையத்துறை வங்கி கணக்கில் உள்ள ரூ.547 கோடியில் இருந்து சிலை பாதுகாப்பு அறை கட்டுவதற்கான நிதி ஒதுக்க வேண்டும். சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நீதிபதி மகாதேவன், கோயில் சிலைகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் உத்தரவிட்டார். பின்னர், இந்த சிலை பாதுகாப்பு தொடர்பான வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.